மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் தீ 23 பேர் மூச்சுதிணறி பலி
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் தீ 23 பேர் மூச்சுதிணறி பலி
ADDED : நவ 02, 2025 11:46 PM
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.
வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் வடமேற்கு மாகாணமான சோனோராவின் தலைநகரான ஹெர்மோசிலோவில், 'வால்டோஸ்' என்ற சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன் தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில், குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர். இவ்விபத்துக்கான காரணம் குறித்து தகவல் இல்லை. இருப்பினும், மின் கசிவால் இவ்விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணங்களை கண்டறியவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யவும் விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த சோனோரா மாகாண கவர்னர் அல்போன்சா துராசோ உத்தரவிட்டுள்ளார். தடயவியல் அறிக்கையின்படி, இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் இரங்கல் தெரிவித்தார்.

