ரோட்டில் தாறுமாறாக ஓடிய கார்: சீனாவில் உடற்பயிற்சி செய்தவர்கள் 35 பேர் பலி
ரோட்டில் தாறுமாறாக ஓடிய கார்: சீனாவில் உடற்பயிற்சி செய்தவர்கள் 35 பேர் பலி
ADDED : நவ 12, 2024 05:40 PM

பீஜிங்: தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் ஷூஹாய் விளையாட்டு மையம் அருகே உள்ள சாலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலியாகினர். 43 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
சீன போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தென்கிழக்கு சீனாவில் உள்ள மக்காவ்க்கு அருகிலுள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் விளையாட்டு மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கார் ஓட்டி வந்த 62 வயது நபர் தான் இந்த பிரச்னைக்கு காரணம். கார் சாலையில் தாறுமாறாக ஓடியதில் 35 பேர் அதே இடத்தில் பலியாகினர். 43 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஓடும் பாதைக்கு வெளியே சிலர் தரையில் பலத்த காயத்துடன் கிடக்கும் அந்த வீடியோ காட்சிகள் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
காயமடைந்தவர்களில் பலர் உடற்பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் பாதையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நடுத்தர வயது மற்றும் முதியவர்கள் என தெரியவந்தது.
நடந்த சம்பவம் தொடர்பாக பேன் என்ற(62 வயது) நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வேண்டுமென்றே மோதினாரா, விபத்தா என்பது உடனடியாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.

