UPDATED : ஜன 17, 2025 01:45 PM
ADDED : ஜன 17, 2025 01:07 PM

நியூயார்க்: கடந்த ஆண்டில் மட்டும் 360 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
நியூயார்க்கை மையமாக கொண்டு செயல்படும் சி.பி.ஜே., ( Committee to Protect Journalists ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் பல்வேறு விஷயங்களுக்காக எழுதி வருகின்றனர். இதில் குறிப்பாக லஞ்ச ஒழிப்பு, வெளியே தெரியாமல் நடக்கும் சட்ட விரோத செயல்கள், இயற்கைக்கு இடையூறு, மேலும் பருவகால மாற்றம் தொடர்பான பாதிப்புகள் குறித்து எழுதி வருகின்றனர். இது போன்று எழுதுபவர்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் காசா போருக்கு முன்னர் தண்டிக்கப்படும் பத்திரிகையாளர்கள் அளவு குறைவாகவே இருந்தது.
உலகில் அதிகபட்சமாக சீனா, இஸ்ரேல், மியான்மர் நாட்டில் முறையே 50, 43, 55 பேர் அவர்கள் செய்த பணி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பத்திரிகையாளர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டாலும் இதனை வெளியே அறிய விடாமல் அந்நாட்டு அரசு கவனமாக கையாள்கிறது. பிரபல பத்திரிகையாளர் தைகூன் ஜிம்மிலாய் ஹாங்காங் சிறையில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலில் பல பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி இருந்தது.
இந்தியாவில் குறைவு
ஆசிய நாடுகளை பொறுத்தவரை வியட்னாம் (16) , வங்கதேசம் (4), இந்தியா (3), ஆப்கானிஸ்தான் (2), பிலிப்பைன்ஸ் (1), வீதம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உலகில் 2021ல் 488 பேர்களும், 2022 ல் 533பேர்களும், 2023 ல் 320 பேர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
' உண்மையை என்றும் அடைத்து வைக்க வழி இல்லை ' என்றும் சி.பி.ஜே., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .