ADDED : அக் 06, 2025 06:05 PM

ரோம்: இத்தாலியில் நடந்த சாலை விபத்தில், இந்தியர்கள் 4 பேர் இறந்ததற்கு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
தெற்கு இத்தாலியில், பசிலிக்காடா மாகாணம் மடிரா நகரில் உள்ள சாலையில், லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த, இந்தியர்கள் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியானவர்கள், குமார் மனோஜ், 34, சுர்ஜித் சிங், 33, ஹர்விந்தர் சிங், 31, மற்றும் ஜஸ்கரன் சிங், 20 என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு இத்தாலியின் மதேராவில் நடந்த சாலை விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததற்கு இந்திய தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
விவரங்களைப் பெற உள்ளூர் இத்தாலி அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டு உள்ளோம். சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு தூதரகம் அனைத்து தூதரக உதவிகளையும் வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.