குவைத் கள்ளச்சாராயம் குடித்த 40 இந்தியர்களுக்கு சிகிச்சை
குவைத் கள்ளச்சாராயம் குடித்த 40 இந்தியர்களுக்கு சிகிச்சை
ADDED : ஆக 14, 2025 11:54 PM
குவைத் : குவைத்தில் வேலை செய்து வரும் 40 இந்தியர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்காசிய நாடான குவைத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாட்டை, சேர்ந்தவர்கள், கட்டட தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மது விற்பனைக்கு தடை உள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் குடித்தது மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த மது குடித்த 63 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 13 பேர் இறந்துவிட்டனர். இந்தியாவை சேர்ந்த 40 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவார். கள்ளச்சாராயம் கிடைத்தது எப்படி என்பது குறித்து புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.