கால்பந்து போட்டியில் மோதல் நெரிசலில் 56 ரசிகர்கள் பலி
கால்பந்து போட்டியில் மோதல் நெரிசலில் 56 ரசிகர்கள் பலி
ADDED : டிச 03, 2024 01:10 AM

கோனக்ரி,
கினி நாட்டில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், கூட்டநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 56 பேர் பலியாகினர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான கினியில், ராணுவ தலைவர் மமாடி தம்பவுயா தலைமையில் ராணுவ ஆட்சி நடக்கிறது.
கண்ணீர் புகைக்குண்டு
இந்நாட்டின் தலைநகர் கோனக்ரியில் உள்ள மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இந்த போட்டியை காண, ஏராளமான ரசிகர்கள் ஒன்று திரண்ட நிலையில், இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
இதனால், மைதானமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதன் காரணமாக போட்டி தடைப்பட்டது. அப்போது, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்த முயன்றனர்.
இதனால், அச்சமடைந்த மற்ற ரசிகர்கள், மைதானத்தை விட்டு ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர்.
பலர் காயம்
இதனால், அங்கு நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உட்பட 56 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலர் மைதானத்தின் மேல் தளத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் பலர் காயமடைந்தனர்.