பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி 69 பேர் பலி
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி 69 பேர் பலி
ADDED : அக் 02, 2025 12:25 AM

மணிலா:பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் செபு மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது, லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் 10.4 கி.மீ., ஆழத்தில் அமைந்திருந்ததாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால், செபு மாகாணத்தின் பல்வேறு நகரங்கள், கிராமங்களில் வீடுகள், இரவு விடுதிகள் இடிந்து விழுந்தன. சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடங்களை தேடி அலைந்தனர்.
இதில், கடலோர நகரமான போகோ கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
இடிபாடுகளில் நுாற்றுக்கணக்கானவர்கள் சிக்கிய நிலையில், 69 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ராணுவத்தினர், காவல் துறையினர், தன்னார்வலர்கள், மோப்ப நாய் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடைவிடாத மழை, சேதமடைந்த பாலங்கள், சாலைகளால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, பிலிப்பைன்சில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மூன்று மணி நேரத்திற்கு பின் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடு திரும்ப மறுத்து, கொட்டும் மழையிலும் திறந்த வெளியில் தங்கியிருந்தனர்.