பாகிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல்: 70 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல்: 70 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
UPDATED : பிப் 01, 2026 12:34 AM
ADDED : பிப் 01, 2026 12:32 AM

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி அங்கு பல ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது.
பலுாச் விடுதலைப்படை என்ற பெயரில் பயங்கரவாதக் குழு அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று, பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டா, நுஷ்கி, மஸ்துங், மக்ரான், சமான், நசீராபாத் உட்பட 12 இடங்களில், பி.எல்.ஏ., பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். 'ஆப்பரேஷன் ஹெரோப்' என்ற பெயரில், போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் வாகனங்கள், சிறைகள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மேலும், நசீராபாத் மாவட்டத்தில் ரயில் பாதையில் வெடிகுண்டுகளையும் வைத்திருந்தனர்.
குவெட்டாவை குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஒரு பெண், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கொடூரமாக கொன்றனர். பதற்றத்தால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க பாக்., ராணுவமும், போலீசும் இணைந்து கடுமையாக போராடியது. இரு தரப்பு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 70 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
போலீஸ், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 பேர் வீரமரணம் அடைந்ததாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

