மகள் இறந்து 18 ஆண்டுக்குப் பிறகு... ஏ.ஐ., வேலையால் பதறியது குடும்பம்!
மகள் இறந்து 18 ஆண்டுக்குப் பிறகு... ஏ.ஐ., வேலையால் பதறியது குடும்பம்!
ADDED : அக் 07, 2024 08:01 PM

சான் பிரான்ஸிஸ்கோ: அமெரிக்காவில் 18 ஆண்டுக்கு முன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் போட்டோவை ஏ.ஐ., கேரக்டராக உருவாக்கியிருப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போயினர்.
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். தற்போது, ஒருவரின் குரலை ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அச்சு அசல் அவரது ஒரிஜினல் குரல் போன்றே உருவாக்க முடியும்.
இந்த அம்சத்தை பயன்படுத்தி தான் மறைந்த பிரபலங்களின் குரலில், சினிமா பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் மோசமான விளைவுகளும் ஏற்படும் என்பதும் நிதர்சனமான உண்மை.
இதனை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அமெரிக்காவில் ட்ரூ க்ரீசென்ட் என்பவரின் மகள் ஜெனிபர் ஆன், கடந்த 2016ம் ஆண்டு அவரது முன்னாள் காதலானால் கொலை செய்யப்பட்டார். மகளின் நினைவாக அவரது தந்தை, இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஜெனிபர் கொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது போட்டோ மற்றும் பெயரைப் பயன்படுத்தி, சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த கேரக்டர் ஏ.ஐ., எனும் நிறுவனம் 'சாட் பாட்' உருவாக்கியிருப்பது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த 'சாட் பாட்' மூலம் பொதுமக்களுக்குத் தேவையான கஸ்டமர் சப்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 69 உரையாடல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அதனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது தந்தை முன் வைத்தார்.
இது தொடர்பாக கொலையுண்ட பெண்ணின் சித்தப்பா பிரைன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஆதரவு பெருகிய நிலையில், ஜெனிபர் ஆன்னின் சாட் பாட்டை அந்நிறுவனம் நீக்கியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏ.ஐ., தொழில்நுட்பம் தனிமனித விஷயங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

