அமைதி வழியில் போருக்கு முடிவு: ரஷ்யா அதிபர் புடின் விருப்பம்
அமைதி வழியில் போருக்கு முடிவு: ரஷ்யா அதிபர் புடின் விருப்பம்
ADDED : அக் 19, 2024 07:31 AM

மாஸ்கோ: உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்தார்.
சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ரஷ்யா உடன் நடந்து வரும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில், ரஷ்யாவில் அக்டோபர் 22,23ம் தேதிகளில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை மொத்தம் 15 பிரிக்ஸ் மாநாடுகள் நடந்துள்ளன.
புடின் அழைப்பின் பேரில் , பிரதமர் மோடி அக்டோபர் 23ம் தேதி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்கிறார். இது குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் புடின் கூறியதாவது: மோதலை தீர்ப்பதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளது. உக்ரைன் உடனான போர் குறித்து தொடர்ந்து கவலைகள் தெரிவித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி.
பிரதமர் மோடியுடன் பேசும் போது, ஒவ்வொரு முறையும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
நாங்கள் அல்ல, ஆனால் உக்ரைன் தரப்புதான் அதை செய்ய வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. ரஷ்யா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான். இவ்வாறு புடின் கூறினார்.