அபாய கட்டத்தில் காற்று மாசு: பாகிஸ்தானில் ஊரடங்கு
அபாய கட்டத்தில் காற்று மாசு: பாகிஸ்தானில் ஊரடங்கு
ADDED : நவ 09, 2024 11:50 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் காற்று மாசு அபாய அளவை எட்டியதை அடுத்து, அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் கட்டாய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துஉள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
முல்தான் நகரில் நேற்று முன்தினம் காலை 8:00 முதல் 9:00 மணி வரை, காற்றின் தரக் குறியீடு 2,135 ஆக பதிவாகியுள்ளது.
இதனால், நகரமே புகை மண்டலமாகி, எதிரே வருபவர்கள் தெரியாத நிலை ஏற்பட்டது.
இந்த காற்று மாசு உடல் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரிலும் காற்றின் தரக் குறியீடு அபாய அளவுக்கு மேல் பதிவாகிஉள்ளது.
பாவல்பூர், முசாபர்கர், கானேவால் மாவட்டங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதால், சாலைகளில் வாகன போக்குவரத்து முடங்கியது.
இதைத் தொடர்ந்து, காற்று மாசுபாட்டை தடுக்க பஞ்சாப் மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காற்றின் தரம் மோசமடைந்ததை அடுத்து, வரும் 17ம் தேதி வரை மாகாணம் முழுதும் உள்ள பூங்காக்கள், அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பல்வேறு நகரங்களில் கட்டாய 'ஊரடங்கு' அமல்படுத்தப்பட்டுள்ளது.
செங்கல் சூளைகள் மற்றும் குப்பை கழிவுகளை எரிப்பது போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாகாணத்தின் 18 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசு உத்தரவை மதிக்காமல் குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் விளையாடுவது தொடர்வதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து, விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாப் மாகாண அரசு எச்சரித்துள்ளது.