சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
ADDED : ஜூலை 17, 2025 06:31 PM

பீஜிங்: சீனாவில் செயல்படும் உணவகத்தில் தேநீர் குடிக்க வருபவர்கள் சிங்கக்குட்டிகளுடன் கொஞ்சி விளையாடலாம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆன்லைனில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தையுவான் நகரில் செயல்படும் வான்ஹுய் உணவகம், 1,078 யுவானுக்கு ( இந்திய மதிப்பில் ரூ.12,871) வாடிக்கையாளர்கள் தேநீர் பருகுவது மட்டுமல்லாமல், சிங்கக் குட்டிகள், மான் மற்றும் ஆமைகள் போன்ற பிற விலங்குகளுடன் கொஞ்சி விளையாட முடியும் என அறிவித்தது.
அதன்படி வாடிக்கையாளர்கள், சிங்கக்குட்டிகள் உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாட அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களில் வாடிக்கையாளர்கள் சிங்கக் குட்டிகளை குழந்தைகளைப் போல, கொஞ்சும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த சலுகை தொடர்பான விளம்பரங்கள், இணையத்தில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் மத்தியிலும், விலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.'இந்த முயற்சி ஆபத்தானது, விலங்குகளுக்கு நல்லதல்ல' என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். 'சம்பந்தப்பட்ட துறைகள் இதை கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று கூறி, அதிகாரிகளின் நடவடிக்கையை விலங்கு ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
இது குறித்து, விலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த நடைமுறை கொடூரமானது, ஆபத்தானது. இளம் விலங்குகளை பொழுது போக்குக்காகப் பயன்படுத்துவது அவற்றின் நல்வாழ்வைப் பாதிக்கும். மக்களை ஆபத்தில் ஆழ்த்தும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சிங்கக் குட்டியை கட்டிப்பிடித்து கொஞ்சுவதற்கு, பீட்டா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.