ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு
ADDED : ஜன 09, 2024 03:36 PM

டோக்கியோ: ஜப்பானில் இன்று(ஜன.,09) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவாகியுள்ளது. மீண்டும் சுனாமி ஏற்படும் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹோன்சு தீவில் கடந்த ஜனவரி 1ம் தேதி பிற்பகல் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஹோன்சு தீவின் மேற்கு கடலோர மாவட்டமான இஷிகவாவை மையமாக வைத்து இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.இவை ரிக்டர் அளவில் 5 முதல் 7.6 வரை பதிவானது.
இதனால் இஷிகவா மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், புல்லட் ரயில் நிலையங்கள் என ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 125க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மீண்டுமா?
இந்நிலையில் ஜப்பானில் இன்று(ஜன.,09) மீண்டும் ஹோன்சு தீவின் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. 46 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் சுனாமி ஏற்படும் என மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.