துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 66 பேர் பலியான சோகம்
துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 66 பேர் பலியான சோகம்
ADDED : ஜன 21, 2025 06:22 PM

அங்காரா: துருக்கியின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் காயமடைந்துள்ளனர்.
போலு மாகாணத்தின் கர்தல்கயா நகரில் உள்ள பொழுதுபோக்கு இடத்தில் உள்ள 12 மாடிகள் கொண்ட ஓட்டல் ஒன்றின் உணவகத்தில் தீவிபத்து ஏற்பட்டு மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இங்கு 234 பேர் தங்கியிருந்த நிலையில், தீவிபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். அதில் இருவர் பயத்தில் மாடியில் இருந்து கீழே குதித்ததால் உயிர் பறிபோனது. மேலும் 51 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தீவிபத்து ஏற்பட்ட போது சிலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். இதனால், பலர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு சிலர், மாடி அறைகளில் இருந்து துணி மற்றும் போர்வை மூலம் கீழே இறங்க முயற்சித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். அங்கிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து தெரியவிலலை. இது குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை துருக்கி அரசு அமைத்து உள்ளது.