UPDATED : நவ 21, 2024 03:49 PM
ADDED : நவ 21, 2024 03:46 PM

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஏல மையத்தில் சுவற்றில் டேப் மூலம் ஒட்டப்பட்டிருந்த வாழைப்பழம் ரூ.52.35 கோடிக்கு ஏலம் போனது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டேப் மூலம் சுவரில் ஒட்டிய வாழைப்பழத்தை, இத்தாலியை சேர்ந்த மொரிசியோ கட்டெலன் என்பவர் வடிவமைத்தார். முதலில் 2019ம் ஆண்டு மியாமி நகரில் உள்ள கலைப்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலரின் கவனத்தை இது ஈர்த்தாலும் விலை போகாமல் இருந்தது.
தற்போது நியூயார்க் நகரின் சவுத்பே ஏல மையத்தில் ' காமெடியன்' என்ற தலைப்பில் வைக்கப்பட்டு இருந்த இந்த வாழைப்பழம் கவனத்தையும், விமர்சனத்தையும் பெற்றது.
இதனை உருவாக்கிய மொரிசியோ கட்டெலன் கூறுகையில் , இந்த ' காமெடியன்' அடிப்படை சாரம்சம் அதன் கருத்தில் தான் அமைந்துள்ளதே தவிர வாழைப்பழத்தில் அல்ல. இதனை வாங்குபவர்கள், வாழைப்பழத்தையும் டக் டேப்பை மட்டும் வாங்கவில்லை. அதனை மறு உருவாக்கம் செய்யும் அறிவுசார் உரிமையையும் பெறுகின்றனர் என்றார்.
இந்த வாழைப்பழத்தை கிரிப்டோகரன்சி நிறுவனத்தை சேர்ந்த ஜஸ்டின் சென் என்பவர் 6.2 மில்லியன் டாலருக்கு ( இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி) ஏலத்தில் எடுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; இது வெறும் கலைப்படைப்பு அல்ல. கலை, மீம் மற்றும் கிரிப்டோ கரன்சி உலகை ஒன்றிணைக்கும் விஷயம். இந்த வாழைப்பழமானது இன்னும் நிறைய சிந்தனையை தூண்டுவதுடன், எதிர்காலத்தில் விவாதத்தை கிளப்பும். வரலாற்றின் ஒரு அங்கமாக இருக்கும். இந்த வாழைப்பழத்தின் உரிமையாளர் என்ற முறையில் நான் பெருமை கொள்கிறேன். இது உலகம் முழுவதும் உள்ள கலை ஆர்வலர்களுக்கு மேலும் உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். வரும் நாட்களில் இந்த வாழைப்பழத்தை நானே சாப்பிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு வாழைப்பழம் ரூ.52.35 கோடிக்கு ஏலம் போனது உலகின் பல முன்னணி கலைஞர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அவர்கள், இந்த கலை பொருட்களுக்கான விலையானது அதனை உருவாக்கியவர் கூறியது அல்ல. அதில் உள்ள பொருட்களுக்கானது அல்ல. இந்த விலை, அது பிரதிபலிக்கும் சிந்தனைக்கானது எனக்கூறுகின்றனர்.