வங்கதேச உள்நாட்டு போர்: கூர்ந்து கவனிக்கும் மத்திய அரசு
வங்கதேச உள்நாட்டு போர்: கூர்ந்து கவனிக்கும் மத்திய அரசு
UPDATED : அக் 24, 2025 02:19 AM
ADDED : அக் 24, 2025 12:48 AM

இரண்டு பேருக்கு இடையே நடக்கும் சண்டை யை வேடிக்கை பார்த்தாலும், விலக்கி விட்டாலும் காயம் ஏற்படும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது.
மீண்டும் சிக்கல் நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்களை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில், சிட்டகாங் மலைத்தொடர் பகுதியிலும் காட்சி மாறியுள்ளது.
ஒரு காலத்தில் போராட்டக் களமாக இருந்த இந்தப் பிரதேசம், 1997ல் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் அமைதியை பார்த்தது.
தற்போது மீண்டும் பழைய நிலைக்கே செல்லும் சூழ்நிலை அங்கு உருவாகியுள்ளது அல்லது உருவாக்கப்பட்டு வருகிறது.
வங்கதேசத்தி ல் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு கடந்தாண்டு அமைந்த பின், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டது. இந்த நேரத்தில், நாட்டின் தென்கிழக்கே உள்ள சிட்டகாங் மலைத்தொடர் பகுதிக்குள் ராணுவம் நுழைந்தது.
மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கும், வங்க மொழி பேசும் குடியேறிகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால மோதலே ' பழங்குடியினப் போர்' என குறிப்பிடப்படுகிறது. கடந்த, 1997ல் நிறுத்தப்பட்ட இந்தப் போர் மீண்டும் துவங்கும் சூழ்நிலையை, வங்கதேச அரசு உருவாக்குவதாக பழங்குடியினர் கூறுகின்றனர்.
மலைப் பகுதிகளுக்குள் ராணுவம் நுழைந்து, எல்லையை பாதுகாப்பதாக கூறி முகாமிட்டுள்ளது. பள்ளிகள், ராணுவத்தினர் தங்குமிடமாக மாறியது. எங்கு பார்த்தாலும், ராணுவ முகாம்கள், ராணுவ வீரர்கள் நடமாட்டம்.
இதனால், விவசாயம் போன்றவற்றில் ஈடுபட முடியாமல் உள்ளூர்வாசிகள் முடக்கப்பட்டனர். இது தங்களை வெளியேற்றும் முயற்சி என்பதால், அரசுக்கு எதிராக பழங்குடியின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே வங்கதேசத்தின் மற்றொரு அண்டை நாடான மியான்மரில் இருந்து செயல்படும், ' அராகன் ஆர்மி' என்ற ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத போராட்டக் குழுவினர், வங்கதேச அரசு தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி மோதல்களில் ஈடுபட்டு வருகிறது.
தங்கள் நாட்டின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் அதே நேரத்தில், வங்கதேசத்துக்கு எதிராகவும், அராகன் ஆர்மி குழுவினர் போராடி வருகின்றனர். ஏற்கனவே, எல்லையை ஒட்டியுள்ள பல பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்தப் பகுதிகள், சிட்டகாங் மலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இவ்வாறு இரண்டு நாடுகளின் எல்லைகளிலும் போராட்டங்களால் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து மிஜோரம் மாநிலம் வழியாக, மியான்மரின் சிட்வே துறைமுகத்தை இணைக்கும், கலடான் பல்முனை போக்குவரத்து திட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை.
அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர்கள், அந்த இரு நாடுகளின் போராட்டக்காரர்களாலும், ராணுவத்தாலும் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வங்கதேசம், மியான்மர் என இரண்டு நாட்டின் எல்லைகளும் ராணுவத்தின் அல்லது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இது புவியியல் ரீதியில் பிளவுகள், வன்முறை சம்பவங்கள், மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது என, நம் நாட்டுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்தபட்சம், எல்லை பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக சிட்டகாங் மலைத்தொடர் பகுதியானது, நம் நாட்டின் மிஜோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும், பிரிவினைவாத மற்றும் பழங்குடியினர் பதற்றங்களை சந்தித்த வரலாறு கொண்டவை.
அதனால், அரகான் ஆர்மி குழுவினர், இந்த மாநிலங்களைச் சேர்ந்த பிரிவினைவாத அமைப்புகளையும் சேர்த்துக் கொள்ள முயற்சியில் ஈடுபடும் அபாயம் உள்ளது. இது வங்கக்கடல் பகுதியில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும்.
மறைமுக பேச்சு பழங்குடியினருக்கு எதிரான வங்கதேச அரசின் அடக்குமுறைகள், நம் நாட்டின் எல்லையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிகளவில் மக்கள் நம் நாட்டுக்குள் நுழைந்து விடுவர். இது நம் நாட்டில் அரசியல் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசுக்கான வாய்ப்புகள் மிகவும் குறுகியதாகவே உள்ளன. அராகன் ஆர்மி குழுவினருடன் திரைமறைவு பேச்சு நடந்து வருகிறது. நேரடி பேச்சு நடத்தினால், அது மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைந்து விடும். மேலும், வங்கதேசத்தின் கோபத்தையும் சந்திக்க நேரிடும்.
இதற்கிடையே, வங்கதேசத்துடன் பேச்சு நடத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. தற்போது நடப்பவற்றை, அந்த இரண்டு நாடுகளுக்கான பிரச்னை என்று மவுனமாகவும் இருக்க முடியாது.
- நமது சிறப்பு நிருபர் -:

