சர்ச்சை வரைபடத்துடன் ரூபாய் நோட்டு: சீன நிறுவனத்துக்கு நேபாளம் ஒப்பந்தம்
சர்ச்சை வரைபடத்துடன் ரூபாய் நோட்டு: சீன நிறுவனத்துக்கு நேபாளம் ஒப்பந்தம்
ADDED : நவ 02, 2024 11:34 PM

காத்மாண்டு: நம் நாட்டிற்கு உட்பட்ட பகுதியை, தங்களுக்கு சொந்தமானதாக காட்டும் சர்ச்சைக்குரிய வரைபடத்துடன் கூடிய, புதிய ரூபாய் நோட்டை அச்சடிக்க நேபாளம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம், சீனாவை சேர்ந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்துடன், 1,850 கி.மீ., துார எல்லையை நாம் பகிர்ந்து கொள்கிறோம். சிக்கிம், மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த எல்லைப்பகுதி அமைந்துள்ளது.
கடந்த, 2020 ஜூன் மாதத்தில், நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது.
அதில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லிபுலேக், காலாபாணி, லிம்பியாதுரா போன்றவை நேபாளத்தின் ஒரு பகுதியாக காட்டப்பட்டிருந்தன. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
செயற்கையாக எல்லையை மாற்றும், நேபாளத்தின் முயற்சி செல்லாது என்றும் அறிவித்தது. இந்நிலையில், நேபாள அரசு, புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க உள்ளது.
அந்த வகையில், 30 கோடி எண்ணிக்கையிலான, 100 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை அச்சிடும் ஒப்பந்தம், சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டை வடிவமைப்பது, அச்சடிப்பது உள்ளிட்டவை, இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ள புதிய ரூபாய் நோட்டில், சர்ச்சைக்குரிய வரைபடமும் இடம் பெற்றுள்ளது. இதற்கு, நேபாள அரசும் ஒப்புதல் அளித்து உள்ளது.