இருதரப்பு இடையே கருத்து பரிமாற்றம்: சீனாவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்
இருதரப்பு இடையே கருத்து பரிமாற்றம்: சீனாவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2025 06:53 AM

பீஜிங்; “இந்தியா - சீனா இடையே நல்லுறவை மேம்படுத்துவதன் வாயிலாக பரஸ்பரம் நன்மை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்தும்; உலகளவில் பதற்றமான சூழல் நிலவும் சூழலில், இரு தரப்புக்கும் இடையே கருத்து பரிமாற்றம் மிகவும் அவசியம்,” என, சீன துணை அதிபர் ஹான் ஜெங்கிடம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம், நம் அண்டை நாடான சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெறுகிறது.
இதில் உறுப்பு நாடாக உள்ள நம் நாட்டின் சார்பில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். இதற்காக, சீனா சென்றுள்ள அவர், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை நேற்று சந்தித்து பேசினார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
சீனாவின், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைத்துவத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. அந்நாட்டு துணை அதிபர் ஹான் ஜெங்குடனான சந்திப்பின் போது, இந்தியா -- சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை குறிப்பிட்டேன். இந்த பேச்சு வாயிலாக இரு நாடுகள் இடையே நேர்மறையான வளர்ச்சிப் பாதை நீடிக்கும் என, நம்புகிறேன்.
உலகளவில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான சுமுக உறவை நீட்டிக்கும் வகையில் கருத்துப் பரிமாற்றம் மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.