ADDED : நவ 26, 2025 10:27 PM

பிரேசிலியா : ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெயிர் போல்சோனாரோ, 2019 முதல் 2022 வரை அதிபராக இருந்தார். கடந்த, 2022ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தொழிலாளர் கட்சி வேட்பாளர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியை தழுவினார்.ஆனால் இதை ஏற்க மறுத்து தேர்தல் மோசடி நடைபெற்றதாக புகார் கூறியதால், ஜெயிர் போல்சோனாரோ ஆதரவாளர்கள் நாடு முழுதும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி, வன்முறையை துாண்டுதல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. பிரேசில் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், ஜெயிர் போல்சோனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மற்றும் வீட்டுக்காவல் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயிர் போல்சோனாரோ பிரேசிலியா சிறையில் அடைக்கப்பட்டார்.

