கொலம்பியா அதிபர் வேட்பாளர் துப்பாக்கி சூட்டில் படுகாயம்
கொலம்பியா அதிபர் வேட்பாளர் துப்பாக்கி சூட்டில் படுகாயம்
ADDED : ஜூன் 09, 2025 01:05 AM

போகோடா: கொலம்பியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முயற்சிக்கும் மிகுவேல் உரிபே துர்பே, 39, பிரசார நிகழ்ச்சியில் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், இடதுசாரி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதிபராக குஸ்டாவோ பெட்ரோ உள்ளார்.
ஆதரவு
இங்கு அடுத்த ஆண்டு மே மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.
எதிர்க்கட்சியான 'டெமாக்ரடிக் சென்ட்ர்' சார்பில் மிகுவேல் உரிபே துர்பே அதிபர் வேட்பாளராக போட்டியிட முயற்சிக்கிறார். இவர் தற்போது எம்.பி.,யாக உள்ளார். இதற்காக ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
போகோடா நகரில் உள்ள பொது பூங்கா ஒன்றில் நேற்று நடந்த பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மிகுவேல் உரிபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரின் தோள்பட்டை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விசாரணை
இந்த சம்பவத்தில் போலீசார், 15 வயது சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சிறுவனும் மற்றொரு நபரும் இந்த சதி திட்டத்தில் பங்கேற்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.