முடியாது... முடியாது... முதல்ல இருந்து நடத்துங்க; பிரிட்டனில் மறுதேர்தலுக்கு வலுக்கும் கோரிக்கை!
முடியாது... முடியாது... முதல்ல இருந்து நடத்துங்க; பிரிட்டனில் மறுதேர்தலுக்கு வலுக்கும் கோரிக்கை!
ADDED : நவ 25, 2024 08:26 AM

லண்டன்: பிரிட்டனில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் 6 மணிநேரத்தில் 2 லட்சம் பேர் கையெழுத்து போட்டிருப்பது ஆளும் தொழிலாளர் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்நாட்டின் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவரது ஆட்சி தொடங்கிய 4 மாதங்களிலேயே அவருக்கு எதிரான அலை பிரிட்டனில் வீசத் தொடங்கியுள்ளது.
கட்சியின் கொள்கை மற்றும் ஆளும் கட்சியின் செயல்பாடுகளினால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், மறுதேர்தல் நடத்தக்கோரி, கையெழுத்து இயக்கம் நள்ளிரவு தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட 6 மணிநேரத்திலேயே 2 லட்சம் பேர் கையெத்திட்டுள்ளனர்.
பொதுவாக, ஒரு சட்டம் அல்லது கொள்கையின் மீது இது போன்ற கையெழுத்து இயக்கம் தொடங்கி 10 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டிருந்தால், அதற்கு அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதேபோல, ஒரு லட்சம் பேர் கையெழுத்து போட்டால், பார்லிமென்ட்டில் விவாதமே நடத்த வேண்டும்.
இப்படிபட்ட சூழலில், அரசுக்கு எதிராக 2 லட்சம் பேர் கையெழுத்திட்டிருப்பது, ஆளும் தொழிலாளர் கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பான செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், 'வாவ்' எனக் குறிப்பிட்டுள்ளார்.