அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!
அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!
UPDATED : அக் 10, 2025 05:30 PM
ADDED : அக் 10, 2025 04:40 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்கு காரணம் குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களாக அதிகம் கவனம் பெற்ற விஷயம் அமெரிக்க அதிபர் டிரம்பும், அமைதிக்கான நோபல் பரிசும் தான். தான் 7 போர்களை நிறுத்தியதற்காக, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டு வந்தார். மேலும், நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறி வந்தார்.
இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதில் டிரம்பின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் காலத்திற்குப் பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 1ம் தேதிக்கு முன்பாக, நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டிரம்ப்பின் பெயரை பிப்.,1க்குப் பிறகு பரிந்துரை செய்துள்ளன. இதுவே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கான காரணமாகும்.
இது குறித்து நார்வேவைச் சேர்ந்த நோபல் பரிசு தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜோர்கன் வாட்னே பிரிட்னெஸ் கூறியதாவது; நோபல் பரிசு தேர்வு கமிட்டி, அனைத்து வகையான பிரசாரங்கள், ஊடக கவனத்தையும் பார்த்துள்ளது. அமைதிக்கு வழிவகுக்கும் காரணிகள் குறித்து ஆயிரக்கணக்கான கடிதங்களை ஆண்டுதோறும் பெறுகிறோம். நாங்கள் அமர்ந்திருக்கும் அறை தைரியம் மற்றும் நேர்மையால் நிரம்பியுள்ளது. எங்களின் முடிவை ஆல்பிரட் நோபலின் (நோபல் பரிசை அறிமுகப்படுத்தியவர்) செயல் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கிறோம், இவ்வாறு கூறினார்.
ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் தியோ ஜெனூ கூறுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் நீண்ட காலமாக நிலைக்குமா? என்று நிரூபிக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் சண்டையை நிறுத்துவதற்கும், மோதலின் அடிப்படை காரணங்களை தீர்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது,' இவ்வாறு அவர் கூறினார்.