இப்படி ஒரு வேலை நடக்குதா; கிரிமினல் கேஸ் போடுவோம் என எச்சரிக்கிறார் எலான் மஸ்க்!
இப்படி ஒரு வேலை நடக்குதா; கிரிமினல் கேஸ் போடுவோம் என எச்சரிக்கிறார் எலான் மஸ்க்!
UPDATED : ஜன 02, 2025 08:09 PM
ADDED : டிச 31, 2024 09:30 AM

வாஷிங்டன்: வணிக அடிப்படையில் விளம்பர பதிவுகளை வெளியிடுவது கண்டறியப்பட்டால், கிரிமினல் கேஸ் போடுவோம் என எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் சமூகவலைதள நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த 2022ம் ஆண்டு விலை வாங்கி சொந்தமாக்கி கொண்டார். அன்றைய தினத்தில் இருந்து, பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார்.
அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டண வசூல் உட்பட அவர் செய்த மாற்றங்கள் ஏராளம். ட்விட்டரின் பெயரையும் எக்ஸ் என மாற்றினார். அதுமட்டுமின்றி, ட்விட்டரின் பிரபல லோகோவான நீலக்குருவிக்கு பதிலாக கருப்பு நிற பின்னணியில் 'எக்ஸ்'(X) என்று லோகோவை மாற்றினார்.
ஆனால் 'எக்ஸ்' என்ற புதிய பெயர் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. ஏராளமானோர் ட்விட்டர் என்றே இன்றும் கூறி வருகின்றனர். இந்த சூழலில், வணிக அடிப்படையில் விளம்பர பதிவுகளை வெளியிடுவது கண்டறியப்பட்டால், கிரிமினல் கேஸ் போடுவோம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அதிக பின்தொடர்வோர் இருக்கும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கங்களை (அக்கவுண்ட்) விலைக்கு வாங்கி, அதன் மூலம் வணிக அடிப்படையில் விளம்பர பதிவுகளை வெளியிடுவது கண்டறியப்பட்டால், குறிப்பிட்ட அந்தக் கணக்கு நீக்கப்படும்; குற்றவியல் நடவடிக்கையும் எடுப்போம். இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.