ஈரானுக்கு செல்ல வேண்டாம்; சொந்த நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானுக்கு செல்ல வேண்டாம்; சொந்த நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ADDED : ஜூலை 11, 2025 07:26 AM

வாஷிங்டன்: ஈரானுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமெரிக்க தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அந்நாட்டை ஜீரணிக்க முடியாத விஷயமாக மாறியுள்ளது.
எனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக ஈரான் தலைவர்கள் வெளிப்படையான மிரட்டல்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர். இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க மக்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஸ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஈரானுக்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள அமெரிக்கர்கள், குறிப்பாக ஈரானிய-அமெரிக்க இரட்டை குடிமக்களுக்கு, கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.
ஈரான் அரசாங்கம் இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்காது. ஈரானில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களுக்கு தூதரக உதவிகள் மறுக்கப்படுகின்றன. தாக்குதல்கள் நிறுத்தப்பட்டாலும், ஈரானுக்கு செல்வது பாதுகாப்பானது இல்லை. இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.