ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி: தொடர்ந்து டிரம்ப் நெருக்கடி
ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி: தொடர்ந்து டிரம்ப் நெருக்கடி
UPDATED : ஜன 14, 2026 07:35 AM
ADDED : ஜன 13, 2026 06:54 AM

வாஷிங்டன்: ''ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது '' என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானில் தொடரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் அந்நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தீவிரமடைந்து, தற்போதைய ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடத்துவோர் மீது ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கையை ஈரான் நிறுத்தாவிட்டால், அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார். இதற்கு ஈரான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. தற்போது ஈரானுக்கு வணிகம் ரீதியாக நெருக்கடி கொடுப்பதில் அதிபர் டிரம்ப் இறங்கி உள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் செய்யப்படும் எந்தவொரு வணிகத்திற்கும் 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த முடிவு இறுதியானது. உறுதியானது, இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

