பாக்.,கில் லஷ்கர் பயங்கரவாதியை குத்திக்கொன்ற குடும்பத்தினர்
பாக்.,கில் லஷ்கர் பயங்கரவாதியை குத்திக்கொன்ற குடும்பத்தினர்
ADDED : மார் 23, 2026 01:08 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி பிலால் ஆரிப் சராபியை அவரது குடும்பத்தினரே குத்தி படுகொலை செய்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்தவர் பிலால் ஆரிப் சராபி. பாகிஸ்தானின் முரித்கேயில், பயங்கரவாதத்திற்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத சித்தாந்தங்களை புகுத்துவதே இவரது முக்கிய பணியாக இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை தொழுகைக்கு பின், முரித்கேயில் உள்ள லஷ்கர் தலைமையகத்திற்கு வந்த சராபியை, அவரது குடும்பத்தினரே சுற்றி வளைத்து கத்தியால் குத்தி கொலை செய்தனர் .
குடும்ப தகராறு காரணமாக இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சராபியை கொன்ற குடும்ப உறுப்பினர்களை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்ற னர்.

