டிரம்பின் முன்னாள் ஆலோசகர் மீது புகார்; ரகசிய தகவல்களை பகிர்ந்ததாக வழக்கு
டிரம்பின் முன்னாள் ஆலோசகர் மீது புகார்; ரகசிய தகவல்களை பகிர்ந்ததாக வழக்கு
ADDED : அக் 18, 2025 07:49 AM

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், பணிக்காலத்தில் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாகக் கூறி தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முந்தைய ஆட்சியின் போது கடந்த, 2018 - 19 வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவர் ஜான் போல்டன்.
பின்னர், 2019-ல் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்ட போல்டன், அவருக்கு எதிரான கடும் விமர்சகராக மாறினார். வரிவிதிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
மேரிலேண்டில் உள்ள ஜான் போல்டனின் வீட்டில், அரசின் ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாகவும், பணி காலத்தில் எழுதிய அரசு குறிப்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021-ல் ஈரான் ஆட்சியுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 'ஹேக்கர்'களால், போல்டனின் மின்னஞ்சல் கணக்கு முடக்கப் பட்ட போது, அவர் பகிர்ந்த ரகசிய தகவல்கள் அம்பலமானதாக எப்.பி.ஐ., தெரிவித்து உள்ளது.
வெளிநாட்டு எதிரிகள் குறித்த ரகசிய தகவல்கள், அரசின் உளவு சேகரிப்பு முறைகள், எதிரியின் ஏவுகணை தாக்குதல் திட்டம் உள்ளிட்ட, 1,000 பக்கங்களுக்கு மேற்பட்ட தகவல்களை குடும்ப உறுப்பினர்களுடன் போல்டன் பகிர்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக்கூறி குற்றச்சாட்டுகளை போல்டன் தரப்பு மறுத்துள்ளது.