ADDED : செப் 23, 2025 07:31 AM

காத்மாண்டு; நேபாளத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்களுக்கும், அதிபர் ராமச்சந்திர பவுடேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், ஊழல் குற்றச்சாட்டு மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் சமீபத்தில் போராட்டத்தில் குதித்தனர். அது வன்முறையாக மாறியதால், பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின், அமைச்சர்களையும் நியமித்து வருகிறார்.
நீர்வளம், நிதி அமைச்சர்களை நியமித்த நிலையில், தொழில், வணிகம், தகவல் தொடர்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சர்களை அறிவித்தார். அதன்படி, முன்னாள் நீதிபதி அனில் குமார் சின்ஹா, தேசிய கண்டுபிடிப்பு மைய நிறுவனர் மஹாபிர் பன், பத்திரிகையாளர் ஜகதீஷ் கரேல் மற்றும் வேளாண் நிபுணர் மதன் பரியார் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதன் மூலம், பிரதமர் சுசீலா கார்கி தலைமையிலான அமைச்சரவையின் பலம் எட்டாக உயர்ந்துள்ளது.