ADDED : மே 28, 2025 06:57 AM

பாரிஸ்: பயங்கரவாத புற்றுநோயை அழிப்பதற்கு ஜனநாயக உலகம் ஒரே குரலில் பேச வேண்டும் என்று பிரான்ஸ் ஒப்புக்கொண்டதாக பா.ஜ., தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
பயங்கரவாதம் மீதான இந்தியாவின் ஜீரோ சகிப்புத்தன்மை நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் 6 நாடுகளுக்கான பயணத்தின் முதல் நாடாக பா.ஜ., தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு கடந்த 3 தினங்களுக்கு முன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றது.
ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை தொடர்ந்து சர்வதேச அளவிலான முயற்சியின் 7 வது குழுவில் டகுபதி புரந்தேஸ்வரி, பிரியங்கா சதுர்வேதி, குலாம் அலி கட்டானா, டாக்டர் அமர்சிங், சாமிக் பட்டாச்சார்யா, அதிமுக எம்.பி., தம்பித்துரை, முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மற்றும் துாதர் பங்கஜ் சரண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பிரான்ஸ், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் ஒன்றாக இருக்கிறது, என்று பா.ஜ., தலைவர் ரவிசங்கர் பிரசாத் தனது அனைத்துக் கட்சிக் குழுவின் ஐரோப்பிய தலைநகரங்களுக்கான பயணத்தின் பாரிஸ் கூட்டத்தின் முடிவில் கூறினார்.
ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்சும் இந்தியாவும், உண்மையில் முழு ஜனநாயக உலகமும், ஒரே குரலில் பேச வேண்டும் என்பதை பிரான்ஸ் முழுமையாக ஒப்புக்கொண்டது. இந்த ஆதரவால் பிரதிநிதிகள் குழு, உண்மையில் நெகிழ்ச்சியடைந்தது, பிரான்ஸ் செனட்டர்களுக்கு நன்றி.
நாங்கள் இங்கே அனைத்தையும் பார்த்தோம், ஆற்றல், இரக்கம், மக்கள் மீதான அன்பு, அதுதான் இங்கு வெளிப்பட்டது.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.