நேபாளத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்: ஊரடங்கு அமல்
நேபாளத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்: ஊரடங்கு அமல்
UPDATED : நவ 20, 2025 09:16 PM
ADDED : நவ 20, 2025 07:47 PM

காத்மாண்டு: நேபாளத்தில் மாணவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் கேபி ஷர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் ஊழல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் நிலவியதால் கோபம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பார்லிமென்ட், நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீவைத்தனர். மாணவர்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல், பிரதமர் பதவியில் இருந்து ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார். அமைச்சர்களும் பதவி விலகினர். இதனையடுத்து சுசிலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்தாண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் மாணவர்கள் மற்றும் ஷர்மா ஒலியின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். அப்போதுஇரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் விமான நிலையம் அருகே வரையும் நீண்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் சுசிலா கார்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

