ADDED : நவ 01, 2024 12:58 PM

மாட்ரிட்: கனமழை காரணமாக ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது.
மேலும் வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் மோசமான நிலை நிலவுகிறது. அந்நாட்டின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள், வேரோடு சாய்ந்த மரங்கள், சேரும் சகதியுமான வீதிகள் மற்றும் வீடுகள், ஒன்றான மீது ஒன்றாக நின்ற கார்கள் என்று திரும்பும் பக்கமெல்லாம் சேதம். இதற்கு மத்தியில் தான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெள்ள நீர் வீதிகளில் பெருக்கெடுத்து பாய்ந்த காரணத்தால் குடியிருப்புகள் நீரால் சூழ்ந்த பகுதி போல காட்சி அளிக்கின்றன. வீதிகள் மிதக்கும் கல்லறையாக மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாகவும் ஸ்பெயின் ராணுவம் மீட்டது. சுமார், 70 பேரை இப்படி மீட்டதாக தகவல் கிடைத்துள்ளது.மீட்கப்பட்டவர்கள் மொட்டை மாடி மற்றும் கார்களில் சிக்கி இருந்தவர்கள். தரைவழியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை அணுக முடியாத சூழலை ராணுவம் எதிர்கொண்டது. தற்போது அங்கு வீடு வீடாக ராணுவத்தினர் மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 1.5 லட்சம் மக்கள் அங்கு மின்சார வசதி இல்லாமல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உயிர் வாழ்வதற்கான அடிப்படை உணவு ஆதாரம் கூட இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.