sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹிஸ்புல்லா தலைவரை..தீர்த்துக்கட்டியது! இஸ்ரேல்

/

ஹிஸ்புல்லா தலைவரை..தீர்த்துக்கட்டியது! இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தலைவரை..தீர்த்துக்கட்டியது! இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தலைவரை..தீர்த்துக்கட்டியது! இஸ்ரேல்

21


UPDATED : செப் 29, 2024 12:05 AM

ADDED : செப் 28, 2024 11:59 PM

Google News

UPDATED : செப் 29, 2024 12:05 AM ADDED : செப் 28, 2024 11:59 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ரூட், செப். 29- லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது நீண்ட காலமாக தாக்குதல் நடத்தி வந்த பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையால் தாக்கி கொன்றது. கடந்த 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா அமைப்பால் ஏற்பட்ட தொல்லைகளுக்கு முடிவு கட்டியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்காசியாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, இஸ்ரேல் தொடர்ந்த போர் ஓராண்டை எட்டியுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் உடன் ஒப்பிடுகையில், ஹிஸ்புல்லா, 10 மடங்கு அதிக வலுவானது. லெபனான் மக்கள் தொகை 54 லட்சம். ஒரு லட்சம் உறுப்பினர்களை கொண்ட ஹிஸ்புல்லா மொத்த லெபனானை தன் கட்டுப்பாட்டில் வைத்துஉள்ளது.

இஸ்ரேலை தீவிரமாக எதிர்க்கும் மற்றொரு அண்டை நாடான ஈரானும், அந்த அமைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறது.

பெரும் பங்கு


கடந்த 1992ல் ஹிஸ்புல்லா தலைவர் அப்பாஸ் அல் முசாவி கொல்லப்பட்டார். இதையடுத்து, ஹசன் நஸ்ரல்லா அப்பதவிக்கு வந்தார். ஹிஸ்புல்லாவை பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக வளர்த்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

இஸ்ரேலை ஜீரணிக்க முடியாத, ஒவ்வொரு நாட்டின் உதவியையும் அவர் கேட்டு பெற்றார். அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகளில் இருந்து அதிநவீன ஆயுதங்களை திரட்டினார். தற்போது அந்த அமைப்பிடம், 1.5 லட்சம் ஏவுகணைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அவற்றில் பெரும்பாலானவை, இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள தெற்கு லெபனான் நகர்களிலும், கிராமங்களிலும் வீடுகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதை இஸ்ரேல் உளவுப்படை கண்டறிந்து, வீடியோ பதிவு செய்துள்ளது.

கடந்த 2006ல் இஸ்ரேல் நடத்திய போரின் போது, லெபனானை பாதுகாப்பதில் ஹிஸ்புல்லா முக்கிய பங்காற்றியது. இதையடுத்தே லெபனான் நிர்வாகம் அதன் கைக்கு வந்தது. ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் அறிவிக்கப்படாத அதிபராக செயல்பட்டார்.

அவரது வழிகாட்டலில், ஹிஸ்புல்லா உலகெங்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி தொல்லை கொடுத்து வந்தது.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு மீது பலத்த தாக்குதல் நடத்தி, அதன் செயல்களை கணிசமாக கட்டுப்படுத்திய பின், இஸ்ரேலின் பார்வை ஹிஸ்புல்லா பக்கம் முழுமையாக திரும்பியது.

பல ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, எக்கச்சக்கமான தகவல்களை திரட்டிய இஸ்ரேல் உளவுப்படை, தீர்த்துக் கட்ட வேண்டிய முக்கிய தளபதிகள் இருப்பிடம், நடமாட்டம் குறித்த துல்லியமான வரைபடத்தை தயாரித்தது.

அதன் அடிப்படையில், கடந்த மாதம் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலை துவங்கியது. இலக்கு தவறாமல் சென்று தாக்கக் கூடிய அதன் நவீன ஏவுகணைகள், ஹிஸ்புல்லாவின் தளபதிகளை ஒருவர் பின் ஒருவராக தாக்கி வீழ்த்தின.

நாள் குறித்தது


கிட்டத்தட்ட முக்கிய தளபதிகள் அனைவரையும் கொன்ற பிறகே, ஹசன் நஸ்ரல்லாவுக்கு நாள் குறித்தது இஸ்ரேல் ராணுவம்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகரில், ஒரு ஆறு மாடி குடியிருப்பின் அடித்தளத்தில் ஹிஸ்புல்லா தலைமையகம் இருப்பதும், நஸ்ரல்லா அங்கு ரெகுலராக வந்து செல்வதும் உறுதி செய்யப்பட்டது.

நஸ்ரல்லா நேற்று முன்தினம் இரவு தலைமையகத்தில் உள்ள தன் அலுவலகத்துக்கு வந்த போது, மின்னல் வேகத்தில் செயல்பட்டது இஸ்ரேல்.

அதன் போர் விமானங்கள் இருட்டை கிழித்துக் கொண்டு, லெபனான் எல்லைக்குள் பறந்து, பெய்ரூட் நகருக்கு மேலே பறந்தபடி ஏவுகணைகளை வீசின. குறி தவறாமல் அவை தாக்கியதில், ஹிஸ்புல்லா தலைமையக கட்டடம் நொடிகளில் தரைமட்டமானது.

'ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இனி இந்த உலகுக்கு அவர் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்' என, இஸ்ரேல் ராணுவம் சுடச்சுட செய்தி அறிவித்தது.

நேற்று அதிகாலை வெளியான அந்த தகவலை உடனடியாக யாராலும் ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை. நேற்று முற்பகலில் தான் ஹிஸ்புல்லா அமைப்பு அதை உறுதி செய்தது. அதன் பெரியப்பா என குறிப்பிடப்படும் ஈரானும் அச்செய்தியை உறுதி செய்தது.

ஹிஸ்புல்லாவின் இரண்டு முக்கிய தளபதிகள் உட்பட மேலும் ஆறு பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், 91 பேர் காயம் அடைந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது. லெபனான் அரசு அதை மறுக்கவில்லை.

கடந்த ஐந்து நாட்களில் நடத்தப்பட்ட இஸ்ரேல் தாக்குதல்களில், 720 பேர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்தது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி ஒருவரும் இதில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

கோலோச்சிய நஸ்ரல்லா

சாதாரண பின்புலம் உள்ள பெரிய குடும்பத்தில், 10 குழந்தைகளில் ஒன்பதாவதாக பிறந்தவர் ஹசன் நஸ்ரல்லா. லெபனானில் பள்ளிப் படிப்பையும், மத கல்வியையும் முடித்தார். 1982ல் இஸ்ரேலுக்கு எதிரான போரின் போது உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் நிறுவனர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பேச்சுத்திறமையால் பயங்கரவாதிகளுக்கு வெறியேற்றுகிறார் என, இஸ்ரேல் பலமுறை அவரை விமர்சித்தது. துவக்கத்தில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இஸ்ரேல் கண்காணிப்பு தீவிரமானதும் வெளியே தலைகாட்டாமல், வீடியோ மட்டும் வெளியிட்டு வந்தார்.அவருடைய மூத்த மகன் ஹாதி, 1997ல் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார். மகள் ஜைனாப், நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். தெற்கு லெபனானில் இருந்து 2002ல் இஸ்ரேல் படையை வெளியேற்றியது, இவரது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.



அடுத்த தலைவர் யார்?

ஹிஸ்புல்லா தலைமை பொறுப்புகளில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதன் அரசியல் விவகாரங்களை கவனித்து வரும் ஹசீம் சபீதின், அடுத்த தலைவராக பொறுப்பேற்றார் என்று கூறப்படுகிறது. ஹிஸ்புல்லாவின் ஜிஹாத் கவுன்சில் தலைவராக உள்ள இவர், ஹசன் நஸ்ரல்லாவின் உறவினர். இவரை, 2017ல் சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.



சிரியாவில் கொண்டாட்டம்

மேற்காசிய நாடான சிரியாவின் வடமேற்கு பகுதியில், இட்லிப் என்ற நகரம் உள்ளது. இது, 'ஹயாத் தஹ்ரிர் அல்- - ஷாம்' என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு கட்டுப்பாட்டில் உள்ளது. இட்லிப் நகரை ஆட்சி செய்யும் இந்த குழு, ராணுவ படைகளையும் வைத்துள்ளது. இந்த பகுதியை கைப்பற்ற, சிரியா அரசு பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், வெற்றி பெற முடியவில்லை. 2000 முதல் சிரியாவில் அதிபராக இருக்கும் பஷார் அசாத், ஹிஸ்புல்லா அமைப்புடன் கைகோர்த்து, இட்லிப் நகரத்தில் தாக்குதல் நடத்தி உள்ளார்.ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை, இட்லிப் நகர மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவரது மரணம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாவதற்கு முன், நகரத்தின் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்த இட்லிப் நகர மக்கள், இஸ்ரேலின் அடுத்த குறி, சிரிய அதிபர் பஷார் அசாத் என்று உற்சாகமாக குறிப்பிட்டனர்.



ஈரான் தலைவர் மாற்றம்

நஸ்ரல்லா கொல்லப்பட்ட செய்தி வந்ததும், ஈரான் மத தலைவர் அயதுல்லா அலி கமேனி, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலி கமேனி வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:ஹிஸ்புல்லா வலுவான கட்டமைப்பு உடையது. அதற்கு சேதம் ஏற்படுத்தும் அளவுக்கு தனக்கு பலம் இல்லை என்பதை இஸ்ரேல் உணர வேண்டும். ஹிஸ்புல்லாவுக்கு உதவியும், லெபனான் மக்களுக்கு ஆதரவும் அளிக்கும்படி முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறேன்.



உருண்ட 4 தலைகள்

ஹிஸ்புல்லாவை முற்றிலுமாக ஒழிப்பது பெரிய சவால் என இஸ்ரேலுக்கு தெரியும். ஹிஸ்புல்லாவை இயக்கும் ரிமோட்களை துாக்கி விட்டால், அமைப்பு நிலைகுலைந்து விடும் என்பதே இஸ்ரேலின் திட்டம். இதனால், ஹிஸ்புல்லா முக்கிய தளபதிகளை குறிவைத்து தாக்கியது.முதலில் ராட்வான் படை தளபதி இப்ராகிம் பெய்ரூட்டில் பதுங்கி இருந்த இடத்தை குண்டு வீசி அழித்தது. அடுத்ததாக ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவின் தலைவர் இப்ராகிம் குபைசியை தாக்கி அழித்தது. மூன்றாவதாக ட்ரோன் படை தளபதி முகமது ஹூசைன் சரூரை குண்டு வீசி கொன்றது. அடுத்தடுத்து மூன்று தளபதிகளை இழந்து ஹிஸ்புல்லா தடுமாறிய வேளையில், தலைவரின் கதையை முடித்துள்ளது இஸ்ரேல்.








      Dinamalar
      Follow us