மோடியுடன் பேசுவேன் டிரம்ப் உடன் பேசமாட்டேன்: வரி விதிப்பால் பிரேசில் அதிபர் காட்டம்
மோடியுடன் பேசுவேன் டிரம்ப் உடன் பேசமாட்டேன்: வரி விதிப்பால் பிரேசில் அதிபர் காட்டம்
ADDED : ஆக 06, 2025 07:53 AM

ரியோ டி ஜெனிரோ: ''அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன்'' என பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
பிரேசில் மீது அமெரிக்கா கூடுதலாக 40% வரி விதித்தது. இதனால் பிரேசிலிய இறக்குமதிகள் மீதான மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா பேசியதாவது:
பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் மிகவும் வருந்தத்தக்க நாள்.
அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன். நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைப்பேன். புடினால் இப்போது பயணம் செய்ய முடியாததால் நான் அவரை அழைக்க மாட்டேன். ஆனால் நான் பல அதிபர்களுடன் பேசுவேன்.
முன்னதாக, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். பிரேசிலின் நிதியமைச்சர் பெர்னாண்டோ ஹடாட், டிரம்பின் நடவடிக்கையை வரவேற்று, அத்தகைய முடிவை எடுக்க, அதிபர் லுலா டா சில்வா தயாராக இருப்பார் என்று கூறினார்.
இருப்பினும், டிரம்புடன் உடன் பேச விரும்பவில்லை என அதிபர் லுலா டா சில்வா தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

