உலக அளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; சுவிஸ் வங்கி தகவல்
உலக அளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; சுவிஸ் வங்கி தகவல்
UPDATED : டிச 06, 2024 10:54 AM
ADDED : டிச 06, 2024 10:19 AM

ஜூரிச்: கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, சுவிஸ் வங்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கியான யூ.பி.எஸ்., பில்லியனர்கள் குறித்த ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1,757 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 2,682 ஆக அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டில் மட்டும் 268 பேர் பில்லியனர்களாக (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) உருவெடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் சுயதொழில் மூலம் வளர்ச்சி கண்டுள்ளனர்.
கடந்த 2015 முதல் 2024 வரையிலான பணக்காரர்களின் சொத்து 121 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 6.3 டிரில்லியன் டாலரில் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) இருந்து 14 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த பணக்காரர்களின் சொத்து 3 மடங்கு அதிகரித்து, 788.9 பில்லியன் டாலரில் இருந்து 2.4 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. வட அமெரிக்கா பணக்காரர்களின் சொத்து மதிப்பு 58.5 சதவீதம் உயர்ந்து, 6.1 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர்களுக்கு சிறந்த வளர்ச்சி இருந்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு 27.6 சதவீதத்தில் இருந்து 40 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பில்லியனர்களின் எண்ணிக்கை 153ல் இருந்து 185 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அவர்களின் சொத்து மதிப்பு 905.6 பில்லியனாக உயர்ந்துள்ளது.
சீனா, ஹாங்ஹாங் உள்ளிட்ட நாடுகளில் பில்லியனர்களின் சொத்து மதிப்பு, 16.8 சதவீதம் சரிந்து, 1.8 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது. 588ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 501 ஆக சரிந்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் அரசியல் பதற்றங்கள், வர்த்தக தடைகள் மற்றும் உயர்ந்து வரும் செலவினத் தேவைகளால் நிலையற்ற உலகத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று யூ.பி.எஸ்., தெரிவித்துள்ளது.