ஜப்பானின் ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி
ஜப்பானின் ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி
UPDATED : ஆக 30, 2025 10:03 AM
ADDED : ஆக 30, 2025 06:41 AM

டோக்கியோ: “ஜப்பானின் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்கு, பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டார். முதலில், நேற்று ஜப்பானின் டோக்கியோ சென்ற பிரதமருக்கு, விமான நிலையத்தில், அந்நாட்டு அமைச்சர்கள், தூதர்கள் மற்றும் உயரதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை உற்சாகப்படுத்தும் வகையில், இந்திய - ஜப்பானிய கலைஞர்கள் பங்கேற்ற பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும், 15வது இந்திய - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார். அப்போது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் அமைச்சர்களுடன் நடந்த கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமானதாகவும், உயர்ந்த நோக்கங்கள் கொண்டதாகவும் இருந்தது. இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் கூட்டாண்மை, இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா - ஜப்பான் இணைந்து செயல்படும்.
ஜப்பானுடனான பொருளாதார உறவு வலுவாக உள்ளது. சிறந்த உலகத்தை வடிவமைப்பதில் வலுவான பங்காளிகளாக நாங்கள் உள்ளோம். எங்களின் கூட்டாண்மை, ஒரு புதிய மற்றும் பொன்னான அத்தியாயத்துக்கு அடித்தளமிட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். எங்கள் தொலைநோக்கு பார்வையின் மையமாக, முதலீடு, புதுமை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியன உள்ளன.
அடுத்த 10 ஆண்டுகளில், ஜப்பானின் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை இந்தியாவில் ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியா மற்றும் ஜப்பானின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உயர் தொழில்நுட்ப துறையில், ஒத்துழைப்பை மேம்படுத்துவதே முக்கியமான இலக்காக உள்ளது. இதில், டிஜிட்டல் ஒத்துழைப்பு 2.0, செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு திட்டங்கள் ஆகிவை எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. செமி கண்டக்டர் மற்றும் அரிய வகை தாது வளங்கள் ஆகியன எங்களின் முக்கிய திட்டங்களாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா கூறுகையில், “இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கடற்சார் பாதுகாப்பு உட்பட உலக அமைதியை பேணுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்த தலைமுறையினரின் சவால்களை சமாளிக்க, இரு தரப்பினரும் தங்கள் பலங்களை பயன்படுத்திக் கொள்ள உறுதிபூண்டோம்,” என்றார்.

