சைபர் குற்றங்களை தடுக்க இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்
சைபர் குற்றங்களை தடுக்க இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்
ADDED : ஜன 19, 2025 03:03 AM

புதுடில்லி, சைபர் குற்றங்களான பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல் போன்றவற்றை தடுப்பதில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் நாளை பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு ஒப்பந்தங்களை நிறைவேற்றி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சைபர் கிரைம் விசாரணைகள் தொடர்பான ஒப்பந்தம், டில்லியில் நேற்று கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கான இந்திய துாதர் வினய் குவாத்ரா மற்றும் அமெரிக்காவின் பொறுப்பு உள்துறை இணை அமைச்சர் கிறிஸ்டி கேன்கல்லோ ஆகியோர் பங்கேற்றனர்.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியா மற்றும் அமெரிக்கா பொதுவான பாதுகாப்பு சவால்கள் பலவற்றை எதிர்கொள்கின்றன. அதில், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தல், போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், சட்டவிரோத இடம்பெயர்வு, பணமோசடி போன்றவற்றில் சைபர் குற்றமும் பங்கு வகிக்கின்றன.
சைபர் கிரைம் விசாரணைகள் தொடர்பான ஒப்பந்தம், இந்தியா- - அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.