இனிப்பாகும் இந்திய உறவு; பெருமிதம் கொள்கிறது பென்டகன்; அமெரிக்காவில் இது நம்ம காலம்!
இனிப்பாகும் இந்திய உறவு; பெருமிதம் கொள்கிறது பென்டகன்; அமெரிக்காவில் இது நம்ம காலம்!
ADDED : ஆக 23, 2024 08:46 AM

வாஷிங்டன்: 'இந்தியா- அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு வலுவானது' என அமெரிக்க ராணுவத் தலைமையகம் 'பென்டகன்' தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான விவகாரங்களில், இப்போதெல்லாம் இந்தியாவுடன் கலந்தாலோசனை செய்ய அமெரிக்க அரசு தவறுவதில்லை. இதற்கு இந்தியாவின் பொருளாதார வலிமை, புவியியல் முக்கியத்துவம் போன்ற காரணங்கள் உள்ளன. இந்தியாவுடன் நட்பு பாராட்ட, அமெரிக்க அரசும், அதிகாரிகளும் தாங்களாகவே விரும்பி முன் வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றார்.
அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லினுடன் ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
ராணுவ உறவு
இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையே உள்ள ராணுவ உறவு குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ உறவு வலுவானது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்தவும் இந்த உறவு பேருதவியாக இருக்கிறது. இந்திய பாதுகாப்பு துறையின் அமைச்சரின் பயணம் இரு நாட்டு உறவை மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தளவாடங்கள்
அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் உயர்மட்ட கூட்டத்திற்கு ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கிறார். எதிரிப்படைகளை தாக்கி அழிக்கக்கூடிய 31 'எம்க்யூ - 9பி' ரக ஆளில்லா சிறிய ட்ரோன் விமானங்கள், 'ஸ்ட்ரைக்கர்'கள் எனப்படும் கவச வாகனங்கள் வாங்குவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர். வரும் ஆகஸ்ட் 26ம் தேதி, ராஜ்நாத் சிங் நாடு திரும்புகிறார்.