இந்தியா அவசரமாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது; தெளிவுபடுத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்
இந்தியா அவசரமாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது; தெளிவுபடுத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்
UPDATED : அக் 24, 2025 04:37 PM
ADDED : அக் 24, 2025 03:48 PM

பெர்லின்: அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய கூட்டாளிகளுடன் நடந்து வரும் வர்த்தகப் பேச்சு வார்த்தைகளுக்கு மத்தியில், “இந்தியா, அவசரமாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது” என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
ஜெர்மனிக்கு வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்று உள்ளார். அங்கு பெர்லின் நகரில் நடந்த நிகழ்ச்சியில், பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியா அவசரமாக எந்த வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது. வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது.
நீண்டகால உறவுகள் மற்றும் உலகளாவிய வணிக ஒத்துழைப்புக்கான நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்திய ஏற்றுமதிகளுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ள அமெரிக்காவுடனும், பல நாடுகளுடனும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை, உடனடி வர்த்தக இலக்குகளை அடைவதற்கான அழுத்தத்தால் அல்ல, நீண்டகால தொலைநோக்கு பார்வையைக் கொண்டது. வர்த்தக ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்கு உரியவை.
இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. சமீபத்தில் வர்த்தக செயலாளர் அமெரிக்காவிற்கு சென்றார். நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்கிறோம். விரைவில் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.

