இந்தோனேஷிய எரிமலை வெடித்து சிதறுவதால் மக்கள் வெளியேற்றம்
இந்தோனேஷிய எரிமலை வெடித்து சிதறுவதால் மக்கள் வெளியேற்றம்
ADDED : நவ 20, 2025 11:26 PM
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் மிக உயரமான எரிமலைகளில் ஒன்றான, 'மவுன்ட் செமெரு' வெடித்து, சாம்பல் புகையை கக்கி வருவதால், அருகில் வசிக்கும் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. அதில், 130 எரிமலைகள் செயலில் உள்ளவை. கிழக்கு ஜாவா தீவில் கடல் மட்டத்தில் இருந்து, 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மவுன்ட் செமெரு எரிமலை, அந்த நாட்டின் மிகவும் ஆக்ரோஷமான எரிமலைகளில் ஒன்றாகும்.
இந்த எரிமலை நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. இதனால் வானுயர சாம்பல் புகை எழுந்து வருகிறது. இது, 13 கி.மீ., உயரத்துக்கு எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது.
இதையடுத்து அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 956 பேர் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் எரிமலை வெடிப்பால் சிக்கித்தவித்த 170 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடைசியாக 2021 டிசம்பரில் 'மவுன்ட் செமெரு' வெடித்து சிதறியது. இதில் 51 பேர் உயிரிழந்தனர்; பல கிராமங்கள் எரிமலை சாம்பலால் மூடப்பட்டன.

