ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கு; நவ.,17ல் தண்டனையை அறிவிக்கிறது சர்வதேச குற்ற தீர்ப்பாயம்
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கு; நவ.,17ல் தண்டனையை அறிவிக்கிறது சர்வதேச குற்ற தீர்ப்பாயம்
ADDED : நவ 13, 2025 02:43 PM

டாக்கா: மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், வரும் நவ.,17ம் தேதி அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தண்டனையை அறிவிக்க உள்ளது.
கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து, அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐ.ஜி., ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை வரும் நவ.,17ம் தேதி வெளியிட இருப்பதாக அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
இதனிடையே, வங்கதேச மக்களுக்கும் தேவையான நிபந்தனை. அது ஜனநாயகத்தில் பங்கெடுப்பது. தவிர, அவாமி லீக் கட்சி மீதான தடை விலக்கப்பட வேண்டும். நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கெல்லாம் இடைக்கால அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே, மீண்டும் தாய்நாடு திரும்புவது சாத்தியமாகும் என்று ஷேக் ஹசீனா நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

