ADDED : ஜூன் 08, 2026 07:16 AM

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்கியதால், மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, பிப்ரவரியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தின.
இதனால், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலகம் முழுதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒரு மாதம் தாக்குதல் தொடர்ந்த நிலையில், கடந்த ஏப்ரலில் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது.
முதல் கட்ட பேச்சு தோல்வி அடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்துக்கு பின், முதன்முறையாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வடக்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹைபா உள்ளிட்ட நகரங்களில் நடந்த தாக்குதலில், பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்தன. உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
