அதிபர் தேர்தலில் ஈரான் தலையீடு: அமெரிக்க உளவுத்துறை அலறல்
அதிபர் தேர்தலில் ஈரான் தலையீடு: அமெரிக்க உளவுத்துறை அலறல்
ADDED : செப் 20, 2024 07:24 AM
வாஷிங்டன்:அதிபர் தேர்தலில் தலையிட முயற்சி செய்கின்றனர். டிரம்ப் பிரசாரம் தொடர்பான தகவல்களை திருட முயன்று வருவதாக ஈரான் ஹேக்கர்கள் மீது அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பரில் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரீசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்பும் களமிறங்கி உள்ளனர்.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஐ., மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஈரான் ஹேக்கர்கள் ஜூன் முதல் டிரம்ப் பிரசாரம் தொடர்பான தகவல்களை திருடி அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு அனுப்ப முயற்சி செய்கின்றனர்.
அதிபர் தேர்தல் தொடர்பாக முரண்பாடுகளை துாண்டி, நம்பிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த திருடப்பட்ட தகவல்களை தாங்கள் பெறவில்லை என ஜனநாயக கட்சி கூறியுள்ளது. இந்த தகவல்களை சில ஊடக நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிகிறது என்று கூறப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் எந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.