ADDED : நவ 12, 2024 05:22 AM

டோக்கியோ: ஜப்பானில், ஆளும் லிபரெல் டெமாக்ரடிக் கட்சியின் ஷிகெரு இஷிபா, 67, நேற்று நடந்த பார்லிமென்ட் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பிரதமராக தேர்வானார்.
ஜப்பானின் லிபரெல் டெமாக்ரடிக் கட்சிக்கு அந்நாட்டு பார்லிமென்டின் இருசபைகளிலும் பெரும்பான்மை இருந்ததால், 2021ல் அக்கட்சியை சேர்ந்த புமியோ கிஷிடா பிரதமராக தேர்வானார்.
இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பதவி விலகினார்.
அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது.
ஒன்பது பேர் போட்டியிட்டனர். இதில், ஷிகெரு இஷிபா தேர்வானார். இதை தொடர்ந்து, அக்., 27ல் தேர்தல் நடத்தப்பட்டது. 465 இடங்களை உடைய ஜப்பான் பார்லிமென்டில், இஷிபா பெரும்பான்மை இழந்தார்.
இந்நிலையில், அந்நாட்டு பார்லி சிறப்பு கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. இதில், பிரதமர் தேர்வு நடந்தது.
அதில், இஷிபாவுக்கு ஆதரவாக 221 ஓட்டுகளும், எதிர்க்கட்சி தலைவரான யோஷிஹிகோ நோடாவுக்கு 160 ஓட்டுகளும் கிடைத்தன.
இதை தொடர்ந்து, ஷிகெரு இஷிபா ஜப்பான் பிரதமராக மீண்டும் தேர்வானார்.