அல் ஜசீரா 'டிவி' அலுவலகத்தை மூடிய இஸ்ரேல்: 100 ராக்கெட்டுகள் ஏவி லெபனான் தாக்குதல்
அல் ஜசீரா 'டிவி' அலுவலகத்தை மூடிய இஸ்ரேல்: 100 ராக்கெட்டுகள் ஏவி லெபனான் தாக்குதல்
ADDED : செப் 23, 2024 01:19 AM

ஜெருசேலம்: பிரபல ஆங்கில செய்திச் சேனலான அல் ஜசீராவை இஸ்ரேல் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டின் மீது,100 ராக்கெட்டுகளை ஏவி லெபனான் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்.,ல் இஸ்ரேலில் புகுந்து கடும் தாக்குதல் நடத்தினர். அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி தந்தது. இரு தரப்பினருக்கும் இடையே துவங்கிய இந்த போர், ஓராண்டை நெருங்கியுள்ளது.
பெண்கள், குழந்தைகள் உட்பட 41,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சோதனை
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான கத்தாரை தலைமையிடமாக வைத்து இயங்கும் பிரபல ஆங்கில செய்தி சேனல் அல் ஜசீராவுக்கு சொந்தமான அலுவலகம், பாலஸ்தீன நகரமான ரமல்லாவில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் இஸ்ரேல் ராணுவம் நேற்று சோதனை நடத்தியது.
அதிகாலை 3:00 மணிக்கு புகுந்த ஆயுதமேந்திய ராணுவத்தினர், உடனடியாக அதன் ஒளிபரப்பை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். அங்கு, பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறும்படி கூறினர். தங்கள் உடைமைகளை மட்டும் எடுத்துச் செல்ல ஊழியர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். அடுத்த 45 நாட்களுக்கு டிவி ஒளிபரப்பை நிறுத்துவதற்கான ராணுவ உத்தரவை, சேனலின் தலைவர் வாலித் அல் ஒமாரியிடம் ராணுவத்தினர் தந்தனர்.
இதையடுத்து, ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தை காலி செய்துவிட்டு வெளியே சென்றனர். இந்த சம்பவத்தில் தாக்குதல் எதுவும் இல்லை என்றும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அனைவரும் வெளியேறிய பின்னர், அல் ஜசீரா அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேற்கு கரையை ஒட்டிய பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், ஒரு பகுதி முழுக்க இஸ்ரேல் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டிலும், மூன்றாவது பகுதி இரு தரப்பினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
அத்துமீறல்
ஏற்கனவே போடப்பட்ட ஓஸ்லா உடன்படிக்கையை மீறி, பாலஸ்தீன கட்டுப்பாட்டில் உள்ள ரமல்லா நகரில் இஸ்ரேல் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் துவங்கியது முதலே, அல் ஜசீரா சேனல், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி வரும் இஸ்ரேல், அந்த சேனலின் ஊழியர்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே, அதன் அலுவலகத்தை மூடி நேற்று சீல் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பயங்கரவாத செயல்களை தொடர்ந்து ஊக்குவித்ததற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
அல் ஜசீரா டிவி முடக்கப்பட்டதற்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும், அதன் உண்மை நிலவரங்களையும் எடுத்துக் கூறியதற்காகவே அல் ஜசீரா டிவி மூடப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீதான பேஜர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீது லெபனான் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு நகரமான ஹைபா மீது, லெபனானில் இருந்து 100 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கட்டடம் சேதம்
அதிகாலை நேரத்தில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில், ஹைபா நகரில் இருந்த கட்டடங்கள் சேதமடைந்தன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்கு பகுதியில் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில், ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் 400க்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், அவர்கள் தளவாடங்கள் வைத்திருந்த பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எல்லை பகுதியில், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக லெபனான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.