ADDED : அக் 18, 2024 01:07 AM

ஜெருசலேம், இஸ்ரேல் ராணுவம் காசா மீது நேற்று நடத்திய தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர், 62, கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர்.
இவர்கள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டேன் என்று சூளுரைத்தார்.
ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் போரில், காசாவில் 40,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் தற்போது ஹமாஸ் தலைவராக உள்ள யாஹ்யா சின்வராக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.
அதை உறுதி செய்வதற்காக அவரது மாதிரிகளை டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் கொல்லப்பட்டது யாஹ்யா சின்வர் தான் என இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது.
யாஹ்யா சின்வர் கடந்த ஆண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர்.