ஊழல் வழக்கில் கடும் தண்டனை; நாடு தழுவிய போராட்டத்திற்கு சிறையில் இருக்கும் இம்ரான் கான் அழைப்பு
ஊழல் வழக்கில் கடும் தண்டனை; நாடு தழுவிய போராட்டத்திற்கு சிறையில் இருக்கும் இம்ரான் கான் அழைப்பு
ADDED : டிச 21, 2025 04:29 PM

நமது நிருபர்ஊழல் வழக்கில் தனக்கும் தனது மனைவி புஷ்ரா பீபிக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகுமாறு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களை வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர் மீது, 'தோஷகானா' ஊழல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாக்., துாதரகம் அனுப்பிய ரகசிய தகவல் களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில், 2023 செப்டம்பரிலிருந்து அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், பரிசு பொருட்களை பதுக்கியது தொடர்பான 2 வது ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 73, மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி, 51, ஆகியோருக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம், தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது. இதனால் தனது ஆதரவாளர்கள் நாடு தழுவிய போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என இம்ரான் கான் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக, இம்ரான் கானின் எக்ஸ் சமூகவலைதள கணக்கில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சோஹைல் அப்ரிடிக்கு போராட்டத்திற்குத் தயாராகும்படி நான் ஒரு செய்தியை அனுப்பியுள்ளேன். முழு தேசமும் அதன் உரிமைகளுக்காக எழுந்து நிற்க வேண்டும். இந்தத் தீர்ப்பு எந்த ஆதாரமும் இல்லாமல், சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் நீதிபதியால் அவசரமாக வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். இவ்வழக்கில் எனது சட்டக் குழுவின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை. சிறையில் உள்ள ஒவ்வொரு கைதியும் தொலைக்காட்சி பார்க்க முடியும், ஆனால் தனக்கும் தனது மனைவிக்கும் தொலைக்காட்சி பார்க்கவே அனுமதி இல்லை. இவ்வாறு இம்ரான் கான் கூறியுள்ளார்.

