ஆயுத போராட்டத்தை கைவிட குர்தீஷ் கிளர்ச்சியாளர்கள் முடிவு
ஆயுத போராட்டத்தை கைவிட குர்தீஷ் கிளர்ச்சியாளர்கள் முடிவு
UPDATED : மே 13, 2025 02:56 PM
ADDED : மே 13, 2025 04:19 AM

அங்காரா : துருக்கிக்கு எதிராக, 40 ஆண்டு காலமாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட குர்தீஷ் கிளர்ச்சியாளர்கள் குழு, ஆயுத போராட்டத்தை கைவிட்டு, அமைதி வழியில் திரும்ப உள்ளதாக அறிவித்து உள்ளது.
மேற்கு ஆசிய நாடான துருக்கியின் அதிபராக ரிகெப் டய்யீப் எர்டோகன் பதவி வகிக்கிறார்.
இங்கு, குர்தீஷ் தொழிலாளர் கட்சி அல்லது பி.கே.கே., என கூறிக் கொள்ளும் குர்தீஷ் கிளர்ச்சியாளர்கள், 1984ல் இருந்து வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, குர்தீஷ் குழுவை பயங்கரவாத அமைப்பாக கருதி துருக்கி மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை செய்தன. இதற்கிடையே, அக்குழுவின் தலைவர் அப்துல்லா ஒக்லான், 1999ல் இருந்து சிறையில் இருக்கிறார். எனினும் குர்தீஷ் கிளர்ச்சியாளர்கள் குழு வன்முறையை தொடர்ந்தது.
அமைதி ஒப்பந்தங்கள் பயனற்றுப்போன நிலையில், சிறையில் இருக்கும் அப்துல்லாவை, சமீபத்தில் துருக்கி அரசியல் தலைவர்கள் சந்தித்து, வன்முறையை கைவிடும்படி கோரினர். இதை தொடர்ந்து கடந்த மார்ச்சில் போர் நிறுத்தத்தை குர்தீஷ் பயங்கரவாதிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், குர்தீஷ் அமைப்பின் கூட்டம் சமீபத்தில் ஈராக்கில் நடந்தது. இதில், குர்தீஷ் தொழிலாளர் கட்சியை கலைத்து ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக முடிவு செய்யப்பட்டது. இது குறித்து, அவர்கள் நடத்தும் 'பைராட் நியூஸ் ஏஜன்சி' வாயிலாக வெளியிட்ட அறிக்கையில், 'குர்தீஷ் தொழிலாளர் கட்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகின்றன.
'இனி, ஜனநாயக அரசியலை முன்னெடுத்து, துருக்கியுடன் அமைதி வழியில் குர்தீஷ் இன மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.