குவைத் தீ விபத்து: தஞ்சாவூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களும் பலி
குவைத் தீ விபத்து: தஞ்சாவூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களும் பலி
UPDATED : ஜூன் 13, 2024 04:07 PM
ADDED : ஜூன் 13, 2024 10:28 AM

குவைத் சிட்டி: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தின் தஞ்சாவூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஆறு மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கட்டுமானப் பணி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் நேற்று (ஜூன் 12) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது மேல் தளங்களுக்கும் வேகமாக பரவியதை அடுத்து, கட்டடம் முழுதும் தீ பற்றியது.
இதையடுத்து, அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. அதிகாலை என்பதால் பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் மூச்சுத் திணறி பலியாகினர். தீ விபத்தில் இருந்து தப்ப முயன்ற பலர், மாடியில் இருந்து கீழே குதித்ததால் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இந்த விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 25 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 5 தமிழர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரை சேர்ந்த ராமு என்பது உறுதியாகியுள்ளது. மற்றொருவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆதனூர் பகுதியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் எனக் கூறப்படுகிறது. அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை, எந்த தகவலும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்தனர்.
7 தமிழர்கள்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ''குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் தென்னவனூரை சேர்ந்த ராமு கருப்பணன், கடலூரை சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரத்தை சேர்ந்த முகமது ஷெரீப், ரிச்சர்ட் ராய், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வானரமுட்டியை சேர்ந்த வீராசாமி மாரியப்பன்,சிவசங்கர், ராஜூ எபினேசர் ஆகிய 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என குவைத் தமிழ் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனாலும், உயிரிழப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை இன்னும் தெரிவிக்கவில்லை'' என்றார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.