மிகப்பெரிய தாமிர - தங்க இருப்புகள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
மிகப்பெரிய தாமிர - தங்க இருப்புகள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
ADDED : ஆக 26, 2025 06:53 AM

இஸ்லாமாபாத்: 'ரெகோ டிக்' திட்டம் வாயிலாக பாகிஸ்தான் பெரும் பணக்கார நாடாக மாற உள்ளது. இத்திட்டத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி 3,579 கோடி ரூபாய் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் மலைகளில், உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத தாமிரம் மற்றும் தங்கம் இருப்புகள் உள்ளதாக நம்பப் படுகிறது.
நிதியுதவி இவற்றை வெட்டி எடுக்கும் சுரங்க திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, 3,579 கோடி ரூபாய் நிதியுதவியை பாகிஸ்தான் பெறுகிறது.
'ரெகோ டிக்' சுரங்க திட்டம் என்பது வட அமெரிக்க நாடான கனடாவின் 'பேரிக் கோல்டு' நிறுவனம், பாகிஸ்தான் அரசு மற்றும் பலுசிஸ்தான் மாகாண அரசு இணைந்த கூட்டு நிறுவனமாாகும்.
இத்திட்டத்தில், பேரிக் கோல்டு நிறுவனம், 50 சதவீத பங்கும், பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாண அரசுகள் தலா 25 சதவீத பங்கையும் கொண்டிருக்கும்.
ரெகோ டிக் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 57,420 கோடி ரூபாயாகும். சமீபத்திய ஆய்வின்படி, ரெகோ டிக் சுரங்கத்தில் 15 லட்சம் டன் தாமிரம் மற்றும் 7.37 லட்சம் கிலோ தங்கம் இருப்பு உள்ளதாக தெரிகிறது.
இது உலகின் மிக குறைந்த விலையில் தாமிர உற்பத்தி செய்யும் சுரங்கங்களில் ஒன்றாகவும், உலகின் ஐந்தாவது பெரிய தாமிர சுரங்கமாகவும் மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
உற்பத்தி ரெகோ டிக் திட்டத்தின் முதல்கட்டத்தின்படி, 2028ம் ஆண்டில் உற்பத்தி துவங்கும். இதன் ஆண்டு இலக்கு 2.40 லட்சம் டன் தாமிரம் மற்றும் 8,505 கிலோ தங்கம் ஆகும். இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் மற்றும் 14,175 கிலோ தங்கமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்கத்தின் ஆயுட்காலம் 37 ஆண்டுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆயுட்காலத்தில் பாகிஸ்தான், இந்திய ரூபாய் மதிப்பில் 6.53 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அந்நாட்டின் மிகப்பெரிய அன்னிய நேரடி மு தலீடுகளில் ஒன்றாகும் . இது அந்நாட்டின் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்க உதவும் என கூறப்படுகிறது.
மற்றொரு புறம், கராச்சியில் இருந்து ரோஹ்ரி வரையிலான 500 கி.மீ., நீள ரயில் பாதை சீரமைப்புக்கு சீனா நிதியுதவி அளிப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இத்திட்டத்திற்கான நிதியளிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இதற்கு தேவையான 17,400 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியுடன் பாகிஸ்தான் தற்போது பேச்சு நடத்தி வருகிறது.
ரெகோ டிக் சுரங்கத்தில் இருந்து தாமிர தாதுக்களை கொண்டு செல்ல இந்த ரயில் பாதை சீரமைப்பு அவசியம் என்பதால், சீனாவின் நிதியுதவியில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க பாகிஸ்தான் ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியை நாடியுள்ளது.ரோஹ்ரி வரையிலான இந்த ரயில் பாதை ரெகோ டிக் சுரங்கத்தில் இருந்து வரும் தாமிர தாதுக்களை துறைமுகம் வரை கொண்டு செல்லும்.