ADDED : செப் 10, 2025 03:39 AM
நம் அண்டை நாடான நேபாளத்தில் நடந்து வரும் போராட்டத்துக்கும், கடந்த ஆண்டு ஜூலையில் நம் நாட்டின் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்த போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள்:
* வங்கதேச போராட்டத்தில் மாணவர்கள் முக்கிய பங்காற்றினர். நேபாளத்தில் நடக்கும் போராட்டத்திற்கு கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் காரணம்
* நேபாளத்தின் சமூக ஊடகத் தடை, வங்கதேசத்தின் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் இரண்டும், ஒரு சிறிய கொள்கை முடிவால் ஏற்பட்ட போராட்டம். ஆனால், அரசுக்கு எதிரான ஆழமான கோபமாக மாறியது
* வங்கதேசத்தில் ஏற்கனவே இருந்த பொருளாதார சீர்கேடுகளும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால சர்வாதிகாரமும் வாரக்கணக்கில் போராட்டம் தீவிரமடைய துாண்டுதலாய் இருந்தது. நேபாளத்தில் சமூக வலைதள தடைக்கு எதிரான போராட்டம், அரசின் ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டமாக உருமாறியது
* வங்கதேசத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்கள் இறந்ததால், போராட்டங்கள் தீவிரமடைந்தன. நேபாளத்திலும், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சுடப்பட்டதால் இரண்டாவது நாள் கலவரம் உச்சமடைந்தது
* வங்கதேசத்தில் இளைஞர்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை சூறையாடினர். இதையடுத்து பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, நாட்டை விட்டு தப்பிச் சென்றார். நேபாளத்தின் இளைஞர்கள் பிரதமர் சர்மா ஒலியின் வீட்டை எரித்தனர். இதையடுத்து, பதவி விலகிய அவர், நாட்டில் இருந்து வெளியேறினார்.